ஃபேஸ்புக் மூலம் கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு - 35 பேர் அதிரடி கைது
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்த 35 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்: கடலூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில், ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் ஃபேஸ்புக் மூலம் மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, மஞ்சகுப்பம் மைதானத்தில் மாணவர்கள் ஏராளமானோர் இன்று காலை அதிரடியாக ஒன்று திரண்டனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்து அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முகநூல் மூலம் திடீரென இணைந்து இளைஞர்கள் போராட்டம் செய்ய துவங்கிவிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்ட களத்துக்கு விரைந்து, போராட்ட மாணவர்கள் 35 பேரை கைது செய்தனர்.