"3D ஸ்கேனர்கள்!" கள்ளக்குறிச்சி கலவரம்.. காரணமானவர்களை கண்டுபிடிக்க பக்கா பிளான்! களத்தில் கலெக்டர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூரில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்தார். இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் சர்ச்சையானது.
அந்த மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் கூறியது.

போராட்டம்
இருப்பினும், இதை ஏற்க மறுத்து மாணவியின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போலீசார் வாகனத்திற்கு தீ வைத்து பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்து, பள்ளி வளாகத்தைச் சூறையாடினர். அங்கு இருந்த நூற்றுக் கணக்கான மாணவ- மாணவிகளின் சான்றிதழ்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

தீவிரம்
இதையடுத்து கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன் பின்னரே நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர், வன்முறை தொடர்பாக வீடியோ பதிவுகளின் அடிப்படையில் இதுவரை 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பள்ளியில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் போலீசாரும் மாவட்ட நிர்வாகத்தினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,

ஆய்வு
கள்ளக்குறிச்சியில் வன்முறை ஏற்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஷ்வரன் குமார் ஜவாத் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளியில் மாணவி உயிரிழந்த இடம் மற்றும் பள்ளி வகுப்பறை மற்றும் போராட்டக்காரர்கள் அடித்து தீ வைத்து சேதப்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறைகள் ஆய்வகங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

3D ஸ்கேனர்
மேலும் பள்ளி அறைகளில் அதிநவீன 3D ஸ்கேனர் வைத்து பள்ளி வளாகம் முழுவதும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இந்த 3D ஸ்கேனர் 360 டிகிரிக்கு ஸ்கேன் செய்து, அந்த பகுதியைப் படம் பிடிக்கிறது. போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற தடயங்களை மிகத் துல்லியமாகப் படம்பிடிக்கிறது. மேலும் கைரேகைகள் உள்ளிட்ட அனைத்துமே இந்த ஸ்கேனில் பதிவாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க இந்த ஸ்கேனர் உதவும் எனக் கூறப்படுகிறது.

தேவையான நடவடிக்கை
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், "பள்ளி மாணவி மரணம் தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக சிபிசிஐடி மற்றும் சிறப்புப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவியின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

விரைவில் பள்ளி திறக்கப்படும்
தனியார்ப் பள்ளி விடுதிக்கு முறையான அனுமதி பெறவில்லை என மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டி உள்ள நிலையில், இதுகுறித்து அந்த ஆணையத்தின் அறிக்கை வந்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியைத் திறக்க அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனவே, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாணவர்களின் விபரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால் எந்த பாதிப்பும் இல்லை" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications