ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் 3வது நீதிபதி நியமனம்… தலைமை நீதிபதி உத்தரவு
சென்னை: ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கில் 2 நீதிபதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 3வது நீதிபதியாக நீதிபதி கிருபாகரனை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
ராம்குமார் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் தனியார் மருத்துவர் தேவையில்லை என்று கூறினார். நீதிபதி ரமேஷ் தனியார் மருத்துவரை நியமிக்கலாம் என்று கூறினார். இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3வது நீதிபதியிடம் இந்த வழக்கு சென்றது.
ஆனால் யார் அந்த 3வது நீதிபதி என்று தெரியாமல் இருந்த சூழலில், இன்று காலை வழக்கறிஞர் விஜயேந்திரன் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம், 3வது நீதிபதியை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி கிருபாகரனை 3வது நீதிபதியாக நியமித்துள்ளார். மேலும் இன்று பிற்பகல் ராம்குமாரின் பிரேத பரிசோதனை குறித்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இரண்டு நாட்களாக ராம்குமாரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுமா அல்லது நாளை நடைபெறுமா என்று இழுப்பும் பறிப்புமாக இருந்த நிலையில் இன்று ஒரு முடிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.