வசமாக சிக்கிய 4 பேர்.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்கள் மீது குண்டாஸ்.. அதிரடி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பலியான நிலையில் 150க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர். இந்த வழக்கில் கைதாகி உள்ள 17 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சிபிசிஐடி பரிந்துரைத்த நிலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் அவர்கள் 4 பேருக்கும் ஓராண்டுக்கு ஜாமீன் என்பது கிடைக்காது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜூன் மாதம் 18 ம்தேதி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை (விஷச்சாராயம்) வாங்கி குடித்தனர். இதில் 200க்கும் அதிகமானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலி ஏற்பட தொடங்கியது. கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 230 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 68 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
மற்றவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்த சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது. தமிழக அரசை பலரும் விமர்சனம் செய்ய தொடங்கினர். மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை அரசு தடுக்க தவறிவிட்டது. கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறையை இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து அந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஷ்ரவன் குமாருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்த் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் கள்ளக்குறிச்சி எஸ்பி சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி கள்ளச்சாராய வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள், வழக்கு குறித்த ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது வரை இந்த வழக்கில் மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பெண்களும் அடங்குவர். இதில் 17 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி போலீஸ் தரப்பில் கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு அடுத்த ஓராண்டு வரை நீதிமன்றத்தில் ஜாமீன் என்பது கிடைக்காது. இதனால் அவர் சிறையிலேயே இருக்க வேண்டும். இதனால் சிபிசிஐடி சார்பில் இந்த பரிந்துரை என்பது செய்யப்பட்டது. ஆனால் கள்ளக்குறிச்சி கலெக்டர் 4 பேர் மீது மட்டும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கினார். அதன்படி வழக்கில் ஏற்கனவே கைதான மாதேஷ், சிவக்குமார், ஏழுமலை, ஜோசப் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications