ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் ஏரியில் மூழ்கி பலி – தர்மபுரியில் பரிதாபம்
காரிமங்கலம்: தர்மபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரிதாபத்தையும் ஏற்படுத்துயுள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் என்கிற கிருஷ்ணன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு நிவேதிதா என்ற மகளும், குருசேரன் என்ற மகனும் இருந்தனர்.
கிருஷ்ணனின் தம்பி வடிவேல். இவரது மனைவி மணிமேகலை இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும், சுமித்ரா என்ற மகளும் இருந்தனர். அண்ணன், தம்பிகளான கிருஷ்ணன் மற்றும் வடிவேல் ஆகியோர் புதுப்பட்டியில் ஏரிக்கரை ஓரத்தில் வசித்து வருகின்றனர்.
நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் குழந்தைகள் 4 பேரும் வீட்டுக்கு அருகில் இருந்த ஏரிக்கு விளையாட சென்றனர். இந்த ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் ஆங்காங்கே குட்டை போல் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த குட்டைக்கு அருகில் நேற்று மாலை குழந்தைகள் 4 பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரி மண் சரிந்து விழுந்து 4 குழந்தைகளும் குட்டையில் விழுந்தனர்.
இந்தநிலையில் ஏரிக்கு விளையாட சென்ற குழந்தைகள் 4 பேரும் வெகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் கிருஷ்ணன், வடிவேல் தம்பதிகள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது குட்டையின் ஓரம் இருந்த மண் சரிந்து விழுந்து இருப்பதும், அதில் குழந்தைகளின் கால் தடயங்கள் பதிந்து இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் சத்தம் போட்டனர்.
அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் குட்டையில் இறங்கி தேடினர். அப்போது குழந்தைகள் 4 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 4 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். தண்ணீரில் மூழ்கி இறந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து பெற்றோர் கதறி அழுத சம்பவம் அனைவரின் மனதையும் உருக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் விரைந்து சென்று 4 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.