தஞ்சை: லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் பலி; 11 பேர் படுகாயம்
தஞ்சாவூர்: தஞ்சை அருகே இன்று காலை லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து திருநள்ளாருக்கு 15 பேர் வேனில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த வேன் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலைப்பட்டினம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, வேன் மீது எதிர்பாரத விதமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வேனில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 11 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியானவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.