மதுரை அருகே கோர விபத்து.. 20 நாள் குழந்தை, நடிகரின் மகன், மகள் உள்பட 4 பேர் பலி
மதுரை: மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 20 நாள் குழந்தை உள்பட நடிகரின் மகன், மகள் என 4 பேர் பலியாகியுள்ளனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் முகமதுகாசிம். இவருடைய மகன் 36 வயதுடைய லுக்காஹக்கீம். இவருடைய மனைவி ஆயிஷா சித்திக். மகன் இம்ரான். லுக்காஹக்கீமின் உறவினரான சபீதாபானுவுக்கு மதுரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 20 தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தையை பார்க்க லுக்காஹக்கீம் குடும்பத்துடன், திருச்சியில் இருந்து மதுரை சென்றார். பின்னர், சபீதாபானு மற்றும் 20 நாள் கைக் குழந்தை, அவருடைய மனைவி ஆயிஷா சித்திக், மகன் இம்ரான் ஆகிய 5 பேரும் காரில் திருச்சி நோக்கி லுக்காஹக்கீம் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தனர்.
எதிர்புறத்தில், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 42 வயதான செந்தில்குமரன் என்பவர் மதுரை நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தார். இவர் மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகரும் ஆவார். இவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் சாய்கவின், மகள் சாய்தென்றல் ஆகியோரும் அந்த காரில் வந்து கொண்டிருந்தனர்.
லுக்காஹக்கீம் ஓட்டி வந்த கார், கொட்டாம்பட்டி அருகே உள்ள சீயந்தான்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் வந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கார், நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதி எதிரே வந்து கொண்டிருந்த செந்தில்குமரன் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
எதிர் பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே கார் ஓட்டி வந்த லுக்காஹக்கீம் பலியானார். அருகில் இருந்த கிராம மக்களின் உதவியுடன் போலீசார் காயமடைந்தவர்களை ஆம்புலன்சு மூலம் கொட்டாம்பட்டி, மேலூர், சிங்கம்புணரி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை, செந்தில்குமரனின் மகள் சாய்தென்றல் ஆகியோர் இறந்தனர். இதுபோல் தனியார் கொண்டு செல்லும் வழியில் சிறுவன் சாய்கவின் இறந்து இறந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமரன், விஜயலட்சுமி, ஆயிஷா சித்திக், இம்ரான், சபீதாபானு ஆகிய 5 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து காரணமாக திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.