சென்னை அரசினர் மகளிர் காப்பகத்திலிருந்து 4 பெண்கள் ஓட்டம்
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் கூர் நோக்கு இல்ல வளாகத்தில் அமைந்துள்ள மகளிர் காப்பகத்திலிருந்து 4 பெண்கள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்பாக்கம் கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளி மற்றும் கூர்நோக்கு இல்லத்திலிருந்து மாணவர்கள் தப்பி செல்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து 17 சிறுவர்கள் தப்பி சென்றனர். இவர்களில் 2 பேர் பயந்து போய் உடனடியாக திரும்பி வந்து விட்டனர். 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். 13 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதே வளாகத்தில் உள்ள மகளிர் காப்பகத்தில் இருந்து நேற்று இரவு 4 பெண்கள் தப்பி சென்றுள்ளனர். ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியுள்ளனர். இவர்களுக்கு தொழில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டு இருந்த பெண்கள்தான் தப்பி சென்று விட்டனர்.
ஏற்கனவே தப்பி ஓடிய தலைமறைவான சிறுவர்கள் இன்னும் பிடிபடாத நிலையில் காப்பகத்தில் இருந்து 4 பெண்கள் ஓட்டம் பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.