திருப்பூரில் தொழிலதிபர் மனைவியை கத்தியால் குத்தி நகையைப் பறித்துச் சென்ற 4 பேர் கைது
திருப்பூர்: அங்கேரிபாளையம் அருகே தொழில் அதிபர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய மனைவியை கத்தியால் குத்தி நகையை பறித்த வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அங்கேரிபாளையம் காதர் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் ( 55). இவர் அந்த பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சைலஜா(50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவரும் கடந்த 9-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த போது, முகமுடி அணிந்த 2 மர்ம நபர்கள் சந்திரனின் வீட்டுக்குள் திடீரென புகுந்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொடுக்கும்படி கேட்டனர். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டனர். அதனையடுத்து, மர்ம நபர்களில் ஒருவன் சைலஜாவை கத்தியால் குத்தினான். பின்னர், அவர்களிடமிருந்து மோதிரம், சங்கிலி, வளையல்கள், மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மர்ம நபர்களை பிடிக்க, காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 3 வாலிபர்கள் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த அலெக்சாண்டர் என்ற பாபு(26), மதுரை ஆரப்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சிவா என்ற சிவக்குமார்(22), தேனி மாவட்டம் கோம்பை பூமரத்தெரு பகுதியை சேர்ந்த ரமேஷ்(24) என்பது தெரியவந்தது.
விசாரணையில், தொழிலதிபர் சந்திரனின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய மனைவியை கத்தியால் குத்தி அவரிடம் நகையை பறித்தது இவர்கள்தான் என்பது தெரிய வந்தது. இதில் அலெக்சாண்டர் என்பவன் சந்திரனிடம் கார் டிரைவராக வேலை பார்த்துள்ளான்.
இதைதொடர்ந்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலேசார் அவர்களிடமிருந்து 12 பவுன் நகை மற்றும் செல்போனை மீட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications