சட்டசபை தீர்மானத்தைப் புறக்கணித்த 4 கட்சிகள்... இதோ இவைதான்!
சென்னை: சென்னையி்ல் நேற்று நடந்த சிறப்பு சட்டசபைக் கூட்டத்தின்போது கொண்டு வரப்பட்ட காமன்வெல்த் மாநாடு தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது நான்கு கட்சிகள் மட்டும் அதில் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டன.
அதிமுக அரசு கொண்டு வந்த இந்த தீர்மானத்தை, திமுக, தேமுதிக உள்ளிட்ட அத்தனைக் கட்சிகளும் குறை சொல்லாமல் ஒருமனதாக ஆதரித்துப் பேசின. வாக்கெடுப்பிலும் கலந்து கொண்டன. ஆனால் இந்த நான்கு கட்சிகள் மட்டும் அதைப் புறக்கணித்து வி்ட்டன.
அந்த நான்கு கட்சிகள் குறித்த பார்வை...

காங். வெளிநடப்பு
தீர்மானத்தின்போது சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசும்போது பிரதமர் குறித்துப் பேசியதால் கோபமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் பதிலளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும், சரத்குமார் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

கிருஷ்ணசாமி வெளியேற்றம்
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரதமருக்கு நன்றி தெரிவிக்கக் கோரி பேசினார். ஆனால் அவரை அமரும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதற்கு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முயற்சித்தார். அதைத் தொடர்ந்து அவரை சபையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் அவர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வாக்கெடுப்ப புறக்கணித்த சிபிஎம்
சட்டசபையில் தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் யாரும் அவையில் இல்லை. விவாதத்தில் மட்டும் கலந்து கொண்டு அக்கட்சி பேசியது.

பாமக வரவே இல்லை
இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து போராடி வரும், காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் பாமக நேற்று சிறப்புக் கூட்டத்திற்கே வரவில்லை. இதற்கான காரணத்தையும் அது கூறவில்லை.
இந்த நான்கு கட்சிகளும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த கட்சிகள் ஆகும். மற்ற கட்சி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications