ஜெ.வின் ஹெலிகாப்டர் இருட்டுவதற்குள் சென்னை திரும்ப 4 பேரை பலி கொடுத்துள்ளனர்- ஸ்டாலின்
விழுப்புரம்: ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் சூரிய வெளிச்சம் இருந்தால் தான் பறக்க முடியும். எனவே இருட்டுவதற்குள் சென்னை செல்ல வேண்டும் என்ற அவரது வசதிக்காக விருத்தாசலத்தில் 2 பேர், சேலத்தில் 2 பேரை பலி கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் மே 16 ஆகும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் ராதாமணியை ஆதரித்து பிரசாரம் செய்த ஸ்டாலின், பின்னர் விழுப்புரம் வந்தார். அங்கு போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அமீர் அப்பாஸை ஆதரித்து பிரசாரம் செய்து பேசியதாவது:

கடந்த 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 24 முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆட்சி நிர்வாக சீர்கேட்டுக்கு இதைவிட வேறு உதாரணம் கூற தேவையில்லை.
விருத்தாசலத்தில் நடந்த ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் 2 பேர் இறந்தனர். அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக பொய் சொல்கிறது போலீஸ். அவர்கள் கொளுத்தும் வெயிலில் அவதிப்பட்டுதான் இறந்தனர். அன்றைய தினம் வெயில் சுட்டெரிக்கும் எனவே பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று வானிலை எச்சரிக்கை விடுத்தும் கூட அன்றைய தினம் ஜெயலலிதா பகல் நேரத்தில் விருத்தாசலத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இதனால் 2 பேர் சாவுக்கு வெயில் கொடுமைதான் காரணம் என்பதை அவர் சிந்திக்க வேண்டாமா?.
அடுத்ததாக சேலத்தில் நடந்த அவரது கூட்டத்தில் 2 பேர் வெயிலில் சுருண்டு இறந்துள்ளனர். மேலும் கற்பகம் என்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். இது மனித உரிமை மீறல் இல்லையா?.
ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் சூரிய வெளிச்சம் இருந்தால் தான் பறக்க முடியும். எனவே இருட்டுவதற்குள் சென்னை செல்ல வேண்டும் என்கிற அவரது வசதிக்காக விருத்தாசலத்தில் 2 பேர், சேலத்தில் 2 பேரை பலி கொடுத்துள்ளனர். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் மே 16 ஆகும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அமைதியாக உள்ளதாக ஜெயலலிதா சேலம் பொதுக்கூட்டத்தில் பொய் கூறியிருக்கிறார். எங்கு அமைதி உள்ளது? ஆங்காங்கே வெடிகுண்டு வீசப்படுகிறது, நடுவீதியில் படுகொலை நடக்கிறது.
திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணம் என்ன? இந்த ஆட்சியின் அக்கிரமம், அதிகாரம், அத்துமீறல் தானே?. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்தது இந்த ஆட்சியில் தானே. தகவல் தொழில்நுட்ப நிறுவன என்ஜீனியர் உமா மகேஸ்வரி கற்பழித்து கொலை செய்யப்பட்டது இந்த ஆட்சியில் தானே...
தமிழகத்தில் 8 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கான கொலை, கொள்ளை கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. நெல்லை மாவட்டத்தை சுற்றிலும் 1 மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
காவல் துறையில் தலையீடு
அடுத்ததாக காவல் துறையில், அ.தி.மு.க.வினர் தலையீடு இல்லை என்று கூறியுள்ளார். நான் கேட்கிறேன் டாஸ்மாக் கடையில் லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீதும், பெண் டாக்டர் ராணிக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக அமைச்சர் பரஞ்ஜோதி மீதும் புகார் வந்ததா, இல்லையா?. என்ன நடவடிக்கை எடுத்தது காவல் துறை?
பாஸ்போர்ட் மோசடியில் அமைச்சர் ஜெயபால், செந்தில் பாலாஜி மீது ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்கு உண்டா இல்லையா? சென்னையில் போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளை செய்தவர் தான் அமைச்சர் வளர்மதி, இது தலையீடு இல்லையா?
கே.வி.ராமலிங்கம் மீது ஆள் கடத்தல் நில அபகரிப்பு புகாரில், அமைச்சர் சின்னையாவை நீக்கீனார்களே பால் வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி மீது மோசடி வழக்கு வந்ததா இல்லையா?. என்ன நடவடிக்கையை காவல் துறை எடுத்தது?.
ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக செல்லும்போது அவருடைய ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக ஹெலிபேட் தளம் அமைக்க விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இனியாவது ஹெலிபேட் தளம் அமைக்க விவசாய நிலங்களை அழிக்க வேண்டாம் என்று ஜெயலலிதாவை கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications