குடும்ப தகராறு... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.. தருமபுரியில் சோகம் !
குடும்ப தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தருமபுரி: குடும்பப் பிரச்சினை காரணமாக தருமபுரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
தருமபுரி மாவட்டம் செட்டிக்கரைபகுதியைச் சோ்ந்தவர் நாகராஜன். இவா் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு நதியா என்ற மனைவியும் அதீஸ்வரன் மற்றும் சபீதா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்துடன் தருமபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங்போர்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இவா்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக அதேவீட்டில் குடியிருந்து வந்துள்ளனா். நாகராஜிக்கும், நதியாவிற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தம்பதிகள் இருவரையும் உறவினர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனா். பின்னர், நாகராஜின் வீட்டில் இருந்து புதன்கிழமை மாலை மருந்து வாசனை வந்துள்ளது.
இதனையடுத்து அக்கம் பக்கத்து வீட்டில் இருந்தவா்கள் சந்தேகப்பட்டு ஜன்னல் வழியாக பார்த்த போது கணவன் மனைவி இருவரும் துக்கில் தொங்கியபடியும், குழந்தைகள் வாயில் நுரைதள்ளியவாறும் இறந்து கிடந்துள்ளனா். குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாண்டிகங்காதர் சம்பவ இடத்தில் நேரடியாக சென்று பார்வையிட்டார். முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து பின் தம்பதியினா் இருவரும் சேலையில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 4 பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
இது குறித்து தருமபுரி நகர காவல்துறையினா் விசாரனை மேற்கொண்டு வருகின்றனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.