செல்பியால் விபரீதம்: அமராவதி ஆற்றில் மூழ்கி சென்னை தம்பதி உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!!
திருப்பூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட தாராபுரத்திலுள்ள தந்தை வீட்டுக்கு வந்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உள்பட நான்கு பேர் அமராவதி ஆற்றில் குளித்துக் கொண்டே செல்பி எடுக்க முயற்சித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிறிஸ்தவர் அனுப்பர் குடிதெருவைச் சேர்ந்தவர் தனபால். தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் சிந்துப்பிரியா , சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிந்துப்பிரியா அவரது கணவர் அருள் ஜோயல் ராஜ் , தம்பி ராஜ் குமார், உறவினர் ஆண்ட்ரோஸ் ஆகியோருடன் தாராபுரம் வந்தார்.

இவர்கள் நான்கு பேரும் நேற்று அங்குள்ள அமராவதி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். அமராவதி புதுப்பாலம் அருகே குளித்துக்கொண்டிருந்த போது சிந்துப்பிரியா செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென சுழலில் சிக்கினார். அதை பார்த்ததும் அருள் ஜோயல் ராஜ் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரும் சுழலில் சிக்கிக் கொண்டார்.
இவர்களைக் காப்பாற்ற ராஜ்குமார், ஆண்ட்ரோஸ் இருவரும் முயற்சி செய்த போது அவர்களும் சுழலில் சிக்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வந்தவர்கள் 4 பேர் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிரை வாங்கும் அந்த செல்பி சந்தோஷம் தேவைதானா?












Click it and Unblock the Notifications