செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை? 4 போலீசார் கைது… டி.எஸ்.பி.க்கு வலை!
வேலூர்: செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு இருப்பதாகக் கூறி ஆம்பூரில் 4 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் தொடர்புடையதாக தேடப்பட்ட ஆம்பூர் கலால் பிரிவு காவல்துறை துணைகண்காணிப்பாளர் தலைமறைவாகியுள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூர் பாமக ஒன்றிய முன்னாள் செயலாளரான சின்னப்பையன், கடந்த 27ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

வேலூர் - அலமேலுரங்காபுரத்தைச் சேர்ந்த ஜோதிலட்சுமிக்கு இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஜோதிலட்சுமியை விசாரிப்பதற்கு அவர் வீட்டிற்கு தனிப்படை போலீசார் சென்றனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏழரை டன் செம்மரக்கட்டைகள் மற்றும் 3 கார்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஜோதிலட்சுமி மற்றும் அவரது கணவர் நாகேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில், செம்மரக்கடத்தலில் ஆம்பூர் கலால் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட 5 போலீசாருக்கு தொடர்பு இருப்பதை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து, தலைமைக் காவலர்கள் சவுந்தர், சாமுவேல் மற்றும் ஓட்டுனர்கள் ராஜேஷ், சீனிவாசன் ஆகிய நான்கு போலீசாரை தனிப்படையினர் கைது செய்தனர்.
தலைமறைவாகியுள்ள ஆம்பூர் கலால் பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலுவை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் சின்னப்பையனுக்கு செம்மரக்கட்டை கடத்தலில் தொடர்பு இருந்ததா என்றும் இது தொடர்பான விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications