விதிமுறையை மீறி ராகிங்... நெல்லை கால்நடை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சஸ்பெண்ட்!
கல்லூரியில் ராகிங் செய்ய கூடாது என்பதையும் மீறி ராகிங் செய்த நான்கு மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
திருநெல்வேலி : நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் கல்லூரி விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி ஆகியவை இணைந்து ராமையன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடர்ந்து ராகிங் செய்யப்பட்டு வருவதாக புகார் அடிக்கடி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் முதலாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை அழைத்து ஆத்தி சூடியை மனப்பாடமாக ஓப்புவிக்க கூறியுள்ளனர்.

ஆத்திச்சூடி ஒப்பிக்க தெரியாதவர்களுக்கு அவர்கள் சொல்ல மறந்த வார்த்தைகளை இம்போஷிஷன் எழுத வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் வாட்ஸ் ஆப்பில் வந்த ஒரு பொம்மலாட்டத்தை காட்டி அதை போல் ஆடுமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். உடனடியாக டீன் மானூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தினேஷ்குமார், குருசாமி, சுரேஷ், வெற்றிவேல் ஆகிய நான்கு மாணவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே நான்கு மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications