தொடரும் அட்டூழியம்... மேலும் 4 தமிழக மீனவர்களைச் சிறை பிடித்த இலங்கை கடற்படை!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.
எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே, இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 47 தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் தற்போது மேலும் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்துக்கு வந்த இலங்கைப் படையினர் மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். அப்போது அவர்களை நெருங்கி வந்த இலங்கை கடற்படையினர் ஒரு சில படகுகளுக்குள் இறங்கி மீனவர்களைத் தாக்கினர். அவர்களின் மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி கடலுக்குள் வீசி எறிந்துள்ளனர்.
அதோடு, பால்ராஜ் என்பவரது படகை சிறைபிடித்த இலங்கைக் கடற்படையினர், அதிலிருந்த 4 மீனவர்களை கைது செய்தனர்.
பின்னர், மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி, 4 பேரையும் ஜனவரி 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, அவர்கள் 4 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் மூலம், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ் மீனவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications