"ஆபரேஷன் ஆம்லா"… இதுவரை 12 “தீவிரவாதிகள்” சிக்கினர்!
சென்னை: ஆபரேஷன் ஆம்லா எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கையின்போது ஊடுறுவிய 12 "தீவிரவாதிகளை" போலீஸார் பிடித்தனர். இந்த 12 பேருமே போலீஸ்காரர்கள்தான். ஒத்திகைக்காக தீவிரவாதிகள் போல இவர்கள் ஊடுறுவினார்கள்.
தமிழகத்தில் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் பாதுகாப்பு ஒத்திகையான ஆபரேஷன் ஆம்லா இன்று தொடங்கியுள்ளது. 48 மணி நேரத்திற்கு இது நடைபெறும். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில், தமிழக போலீஸார், கடலோரப் பாதுகாப்புப் படையினர், கடலோரக் காவலர்கள் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபடுவார்கள்.
தூத்துக்குடி கடல் பகுதியில் இன்று ஆப்ரேஷன் ஆம்லா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் கடலோர காவல் குழுமத்தினர், தமிழக காவல்துறையினர் ஈடுபட்டனர். தூத்துக்குடி இனிகோ நகர் கடல் பகுதியில் ஊடுறுவிய மூவர் மற்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தின் வழியாக நுழைய முயன்ற 3 பேர் என 6 பேர் பிடிபட்டனர்.
அதேபோல சென்னையில் கொட்டிவாக்கம் பகுதியில் 3 "தீவிரவாதிகளையும்", காசிமேடு துறைமுகப் பகுதியில் 6 பேரையும் போலீஸார் சரியாக கண்டுபிடித்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக
கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆபரேஷன் ஆம்லா நடத்தப்படுகிறது. வருடத்திற்கு 2 முறை இது நடத்தப்படும்.

2008ம் ஆண்டு முதல்
இந்த பாதுகாப்பு ஒத்திகை, மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி கடல் மார்க்கமாக மும்பைக்குள் ஊடுறுவிய பத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெறியாட்டம் போட்ட சம்பவத்திற்குப் பின்னர் நடத்தப்பட்டு வருகிறது.

ஒத்திகை
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் இது நடத்தப்படுகிறது. கடல் மார்க்கமாக மட்டுமல்லாமல், தரை மார்க்கமாகவும், விமானம் மூலமாகவும் தீவிரவாதிகள் ஊடுறுவினால் எப்படி அவர்களைப் பிடிப்பது, எப்படித் தடுப்பது என்பது குறித்த ஒத்திகையாக இது மேற்கொள்ளப்படுகிறது.

போலீஸார் தீவிரவாதிகளே…
டம்மி வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் போலீஸார் தீவிரவாதி போல ஊடுறுவுவார்கள். அவர்களைப் போலீஸார் கண்டுபிடித்து பிடிக்க வேண்டும்.

வருடத்திற்கு 2 முறை
வருடத்தின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு ஒத்திகையும், ஜூன் அல்லது ஜூலையில் 2வது ஒத்திகையும் நடத்தப்படும்.

சில நேரம் ஓட்டை
இதுவரை நடந்த ஒத்திகைகளில் தீவிரவாதிகள் போல ஊடுறுவிய அனைத்துப் போலீஸாரும் சரியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்ற போதிலும், ரோந்து மற்றும் கண்காணிப்பில் சில ஓட்டைகள் இருந்ததும் தெரிய வந்தது.

கமிஷனர் அலுவலகத்திற்குள் ஊடுறுவல்
கடந்த 2011ல் நடந்த முதல் ஒத்திகையின்போது பல போலீஸாரை சரியாக கண்டுபிடித்து விட்டனர். அதேசமயம், கமிஷனர் அலுவலகத்திற்குள்ளேயே தீவிரவாதிகள் போல வந்த போலீஸாரை நம்மவர்கள் கோட்டை விட்டு விட்டனர்.

தலைமைச் செயலகத்திற்குள்
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒத்திகையின்போது தலைமைச் செயலகத்திற்குள் சிலர் புகுந்து அங்கு தாங்கள் வந்து சென்றதை உணர்த்திச் சென்றனர். ஆனால் அவர்கள் பிடிக்கப்படவில்லை. இது பெரும் பாதுகாப்பு குறைபாடாக விமர்சனத்துக்குள்ளானது.

இன்று தொடக்கம்
இன்று தொடங்கியுள்ள ஆபரேஷன் ஆம்லாவிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தீவிரவாதிகள் போல ஊடுறுவியுள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

48 மணி நேரம் நீடிக்கும்
தமிழகம் முழுவதும் இந்த ஆபரேஷன் ஆம்லா பாதுகாப்பு ஒத்திகை களை கட்டியுள்ளது. 48 மணி நேரம் நீடிக்கும் இதன் இறுதியில்தான் அத்தனை தீவிரவாதி போலீஸாரையும், நம் போலீஸார் பிடித்தனரா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications