ஒரு அரசு வாகனமும் ஆர்.கே.நகருக்குள் நுழையக் கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதிக்குள் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் நுழைவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே பணப் பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையம் தனியாக குழுக்கள் அமைத்துள்ளது. வாக்குப்பதிவையொட்டி கூடுதலாக துணை ராணுவ படைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆய்வுக்குழு அனுப்பிய அறிக்கையில் படி தேர்தல் ஆணையம் சில அதிரடி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆர்.கே.நகரில் கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்கள் தொகுதிக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு உயர் அதிகாரிகளின் கார்களாக இருந்தாலும் சோதனை நடத்திய பிறகே தொகுதிககுள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு உயர் அதிகாரிகள், கூடுதல் காவல் ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், நகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். பறக்கும் படையில் மத்திய அரசு பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். 24 மணிநேரமும் செயல்படும் பறக்கும் படையினரை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணக்க வேண்டும். தேர்தல் பணிகளுக்காக கூடுதலாக 5 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications