கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர் செல்போனில் கதறிய பரிதாபம்..!
சென்னை: சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்பு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் செல்போன் மூலம் வெளியில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு தன்னையும், தன்னுடன் சிக்கியுள்ள 5 பேரையும் காப்பாற்றுமாறு கதறியுள்ளார்.
ஆனால் தற்போது அவரது செல்போன் ஆப் ஆகி விட்டதால் அவர் மற்றும் உடன் இருப்பவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
நேற்று நடந்த இந்த பெரும் அசம்பாவிதத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடந்த வருகின்றன. அப்போது கட்டடத்தின் பின் பகுதியில், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒருவர் செல்போனில் பேசினார்.

தன்னுடன் 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், உள்ளே இருட்டாக இருப்பதாகவும், மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துத் தங்களைக் காப்பாற்றுமாறு கூறி கதறினார். அதன் பிறகு அவரது போன் ஆப் ஆகி விட்டது.
உள்ளே இருந்த மற்றவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.
விபத்து நடந்த கட்டடம் இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு வந்தது. இரண்டும் தலா 11 மாடிகள் கொண்டவை. ஒவ்வொரு மாடியிலும் 4 வீடுகள் வரை இரு கட்டடங்களிலும் மொத்தம் 88 வீடுகள் உள்ளன.
இதில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து விட்டது. இந்த கட்டத்தின் இரு பக்கமும் திறந்த வெளி இருப்பதால் அந்தப்பகுதியில் இருந்தவாறு எந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணி நடைபெறுகிறது.
இதற்கிடையே, கட்டடத்தின் 3-வது பக்கம் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்டு சுவர் உள்ளது. அந்த சுவரை இடித்து விட்டு அதன் வழியே மீட்பு பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. 4-வது திசையில் மற்றொரு 11 மாடி கட்டிடம் இருப்பதால் அதன்வழியே போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு 11 மாத கட்டடத்தின் அருகில் சிறிய அபார்ட்மெண்ட்கள் உள்ளன. அதில் வசித்து வந்த குடும்பங்கள் முன் எச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
இடிந்த கட்டடத்தில் இருந்து 2.கி.மீ. தொலைவில் மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளது. 11 மாடி கட்டடம் இடிந்ததும் விமான நிலையம் வரை கரும்புகை மண்டலம் காணப்பட்டது. புகை மண்டலம் விலகி இயல்பு நிலைக்கு திரும்ப அரை மணி நேரம் ஆனது.












Click it and Unblock the Notifications