பெண்ணால் ஆரம்பித்த பிரச்சினை.. சென்னை ரவுடி விஜி கொலை ஏன்?- கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்
Recommended Video
சென்னை: தண்டையார்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி விஜயகுமார் கொலை வழக்கில் கைதானவர்கள் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தண்டையார்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்தவர், விஜயகுமார் என்கிற விஜி (24) ரவுடியான இவர் மீது கொலை உட்பட, 18 வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. இதனால் 2013 முதல் விஜி ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
நவம்பர் 29ம் தேதி வழக்கு விசாரணைக்காக, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, விஜி மட்டும் மண்ணடி பகுதியில் நடந்து சென்றார்.
5 பேர் கும்பல்
அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல், அவரை விரட்டி, விரட்டி சரமாரியாக வெட்டியது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. ரத்த வெள்ளத்தின் நடுவே விஜயகுமார் அந்த இடத்திலேயே பலியானார்.
சிசிடிவியில் காட்சிகள்
இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தபோது, கொலை சம்பவம் அதில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. காமிராவில் பதிவான நபர்களை அடையாளம் கண்ட போலீசார் கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.
கொலையாளிகள் கைது
திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த, முனுசாமி, அப்துல் சமீம், வெங்கடேசன், கணேசன், மோகன் ராஜ் ஆகிய 5 கொலையாளிகளும் கைது செய்யப்பட்டவர்களாகும். இவர்கள் தண்டையார்பேட்டையை சேர்ந்த அப்பு என்ற ரவுடியிடம் கூலிப்படையாக வேலை பார்த்துள்ளனர்.
ரவுடிகளின் நட்பு
விஜிக்கும், அப்பு என்கிற சிட்டிசனுக்கும் நட்பு இருந்துள்ளது. இருவரும் இணைந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் அப்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண் மீது காதல்வயப்பட்டுள்ளார். இதையறிந்த விஜியும் அந்த பெண்ணை தன் வலையில் விழ வைக்க முயற்சி செய்துள்ளார். இதற்காக அந்த பெண்ணுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளார்.
காதல் தகராறு
இதையடுத்து அந்த பெண்ணும் விஜயகுமாரை காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதனால் விஜி மற்றும் அப்பு நட்பில் விரிசல் ஏற்பட்டது. 2016ல் அப்பு, விஜியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அதில் விஜி தப்பிவிட்டார். அதேபோல அப்புவை கொலை செய்ய விஜி முயன்றபோதும் விஜி காயங்களோடு தப்பிவிட்டார்.
தொடர் மோதல்
இருவருமே சிறையில் அடைக்கப்பட்டபோது சிறைக்குள்ளும் மோதிக்கொண்டுள்ளனர். இந்த நிலையில்தான், தனியாக விஜியை கொலை செய்ய முடியாது என்பதை அறிந்த அப்பு, தனது கூட்டாளிகளை ஏவி, நீதிமன்றம் அருகே வைத்து விஜியை தீர்த்துக் கட்டியுள்ளார். பெண்ணுக்காக ஆரம்பித்த சண்டை கொலையில் முடிந்துள்ளதாக வாக்குமூலத்தில் அந்த நபர்கள் தெரிவித்துள்ளனர். அப்பு உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகிறதாம் போலீஸ்.