சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு.. நிர்மலா தேவி இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்
பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீஸார் 5வது நாளாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் : பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீஸார் 5வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட பேராசிரியர் முருகனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம், மதுரை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணைங்குமாறு அழைப்பு விடுத்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். 12 நாட்கள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணை முடிவு
இதனையடுத்து, சிபிசிஐடி சிறப்பு அதிகாரி எஸ்பி ராஜேஸ்வரி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நிர்மலா தேவியிடம், கடந்த 4 நாட்களாக விருதுநகரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் 5 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர்
அதே சமயம் ஆளுநர் நியமித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானமும் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வணிக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை
இந்த விவகாரத்தில் தலைமறைவான முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழி சென்ற சிபிசிஐடி போலீஸார் கருப்பசாமியின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி முடிவு
கடந்த ஓர் ஆண்டாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகளையும் வைத்து விசாரணை செய்ய முடிவுசெய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நிர்மலா தேவியை மீண்டும் சில நாட்கள் காவலில் எடுக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications