எங்கு பார்த்தாலும் மழை... இடி மின்னல் தாக்கி 5 பேர் பலி
சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. இந்த மழைக்கும், இடி மின்னல் தாக்கியும் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இது வட கிழக்குப் பருவ மழைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த மழை நான்கு நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நெல்லை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, காவிரி டெல்டா மாவட்டங்கள் என தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதாக தகவல்கள் கூறுகின்றன.
பல இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை கொட்டியது. நெல்லையில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. நேற்று மாலை 5 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மானூர் அருகே உள்ள தெற்கு வாகைக்குளத்தை சேர்ந்த துரைப்பாண்டி (22), லட்சுமணன் (21) உள்பட 7 தொழிலாளர்கள், வடக்கு வாகைக்குளம் அருகே பாலஸ்தீனபுரத்தில் தோப்படி சுடலைமாடன் கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்தில் நேற்று மராமத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பலத்த மழை பெய்ததால் நனையாமல் இருக்க துரைப்பாண்டியும், லட்சுமணனும் அங்குள்ள மரத்தின் கீழ் ஒதுங்கினர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் கருகி இறந்தனர்.
மானூர் அருகே மடத்தூரைச் சேர்ந்தவர் மரியம்மாள் (65). நேற்று அங்குள்ள தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. மீசநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 15 பெண்கள் வேர்க்கடலை பறித்துக் கொண்டு இருந்தனர். பலத்த மழை பெய்ததால் அவர்கள் தெய்யார் கூட்டு சாலையில் உள்ள ஒரு கொட்டகையை நோக்கி ஓடினர்.
அப்போது மின்னல் தாக்கியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி ஜெயா (40) என்பவர் அதே இடத்தில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். மணி என்பவரது மனைவி முனியம்மாள் (46) படுகாயம் அடைந்தார்.
மீசநல்லூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பனின் மனைவி விஜயலட்சுமி (36). தனது தந்தை ஏழுமலையுடன் நிலத்தில் தைல மரக்கன்றுகளை நட்டுக் கொண்டு இருந்தார் அப்போது இடி தாக்கியதில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் மின்னல் தாக்கியதில் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த 2 பேர் பலியாகியுள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த பூஜா என்ற பெண்ணும் மற்றொரு ஆணும் மின்னல் தாக்கியதில் பலியாகியுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள போதிலும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளால் அசவுகரியங்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications