இன்றும் 6 விவசாயிகள் பலி... பலி எண்ணிக்கை 100ஐ தொடும் கொடுமை.. இன்னும் தொடரும் அச்சம்!
வறட்சியின் காரணமாக இன்றும் 6 விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். என்றைக்குத்தான் இந்த கொடுமைகள் தீருமோ என்று தலைமையில் அடித்துக் கொண்டு உறவினர்கள் கதறி அழுகின்றனர்.
தஞ்சை: விழுப்புரம், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 விவசாயிகள், பயிர்கள் கருகியதைக் கண்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். விவசாயிகளின் தற்கொலை மரணமும், மாரடைப்பு மரணமும் அன்றாட செய்திகளாகிவிட்ட நிலையில் இதற்கான தீர்வுதான் என்ன என்று உறவினர் கதறுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே பரமணிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு, நீரின்றி பயிர்களி கருகியதைக் கண்டு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
அதே போன்று புதுக்கோட்டை குளவாய்பட்டியைச் சேர்ந்த குப்பமுத்து என்ற விவசாயிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பயிர்கள் கருகியதால் மன உலைச்சலில் இருந்த விவசாயி குப்பமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சின்னகுமிலி கிராமத்தில் வசித்து வந்த விவசாயி ராமசாமியும், பயிர்கள் கருகி விவசாயம் பொய்த்துப் போன மன வேதனையில் உயிரிழந்துள்ளார். பட்டுக்கோட்டை ஆலந்தூரைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கணகங்குப்பத்தைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயியும் பயிர் கருகிய துக்கம் தாளாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள கணக்கன்குப்பம் விவசாயி முருகன். 55 வயதான பயிர் கருகிய அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
ஆக, இன்று ஒரே நாளில் மட்டும் 6 விவசாயிகள் இதுவரை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இந்தக் கொடுமைகள் எத்தனை நாள்தான் நீடிக்குமோ என்று உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்கள் கதறி அழுகின்றனர்.