நெல்லையில் சுற்றித்திரிந்த கூலிப்படையினர் 5 பேர் கைது
நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 5 கூலிப்படையினரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 5 கூலிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான கொலை,கொள்ளை, வழிப்பறி,கொலை முயற்சி, கட்டபஞ்சாயத்து உள்ளிட்டவை செய்துகூலிப்படையாக செயல்பட்ட 5 பேர் நெல்லையில் பிடிபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த துரைமுருகன், யோசுபாலன்,கருப்பசாமி,விஜயகுமார், குமரி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன் ஆகியோர் 2 கார்களில் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் முக்கிய புள்ளி ஒருவரை சந்திக்க வந்துள்ளனர்.
அப்போது பாவூர்சத்திரம் பகுதியை சார்ந்த அரிகிருஷ்னன் என்பவரை வழிமறித்து ரூபாய் ஆயிரத்தை இவர்கள் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து தனிப்பிரிவு போலீசார் கூலிப்படை கும்பல் சென்ற காரை பல்வேறு பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.
இந்த கும்பல் ஒரு இடத்தில் நிற்பதை போலீசாருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ள்னர். இவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் அனைவர் மீதும் நெல்லை,கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை,திருவண்ணாமலை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும் அனைத்து வழக்குகளிலும் இவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் போலீசில் சிக்கியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.