தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேலும் 5 பேர் ஆளுநருடன் சந்திப்பு? எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ்?
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேலும் 5 பேர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடியாருக்கான ஆதரவை வாபஸ் பெறும் கடிதம் தர உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேலும் 5 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தினகரன் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தினகரன் வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, எங்கள் தரப்பில் மொத்தம் 21 பேர் வெளிப்படையாக உள்ளனர். இவர்களில் 18 பேரை நீக்கியுள்ளனர். சட்டப்படி நாங்கள் இதை எதிர்த்து போராடுவோம்.
அதேநேரத்தில் பதிலடி நடவடிக்கையாக மேலும் 5 எம்.எல்.ஏக்கள் விரைவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் தரப்போகின்றனர்.
எங்கள் தரப்பில் மொத்தம் 37 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு அணியாக வெளியே வந்து கொண்டே இருப்பர் என்கின்றனர் விடாத நம்பிக்கையுடன்.