சங்கரன்கோயில் அருகே 5 கொள்ளையர்கள் அதிரடி கைது.. 92 சவரன் நகை, ரூ.7 லட்சம் பறிமுதல்!
நெல்லை: நெல்லைமாவட்டம் சங்கரன்கோவில் அருகே பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரினை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 92 சவரன் நகை, ரூ.7 லட்சம் உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்னர்.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில், அம்பை, புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார்களை கொடுத்து வந்தனர். அதன்அடிப்படையில் போலீசார் நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வாசுதேவநல்லூரை சேர்ந்த செல்வக்குமார், உத்தமபாளையத்தை சேர்ந்த மூர்த்தி (எ) மாரிச்சாமி, திருக்கரன் குடியைச் சேர்ந்த சுரேஷ், தெற்குப் பனவடலியை சேர்ந்த கொடுங்குசாமி, திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திகேயன் ஆகிய 5 பேரினை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அத்துடன் பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த, 92 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி, ஒரு கார், ரூ.7 லட்சம் பணம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.