மதுரை அதிமுக பிரமுகர் கொலை: 5 பேர் சிவகங்கை கோர்ட்டில் சரண்
மதுரை: மதுரை அதிமுக பிரமுகர் மயில்முருகன் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மதுரை 72வது வட்ட மேலமைப்பு பிரதிநிதியும் ஜனதா கூட்டுறவு சங்க இயக்குநராகவும் இருந்தவர் மயில்முருகன். இவரை கடந்த 24ம் தேதி ஆட்டோவில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. 23ம்தேதி திமுக பிரமுகர் குருசாமியின் உறவினர் கஜேந்திரபாண்டி என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குபழியாக மயில்முருகன் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக துணை கமிஷனர் சமந்த் ரோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது., இந்நிலையில் இன்று காலை சிவகங்கை ஜேஎம் கோர்ட் நீதிபதி வெங்கடேசபெருமாள் முன்னிலையில் ஐந்து பேர் சரணடைந்தனர்.
அலெக்ஸ்பாண்டியன், மாதவன், சடையாண்டி, மாடு மணியன் என்ற மணிகண்டன், முத்துராமலிங்கம் ஆகிய ஐந்து பேர் வழக்கறிஞர் கருப்பையா மூலமாக சரணடைந்தனர். சரணடைந்த ஐந்து பேரையும் வரும் 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் அதன்பின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஐந்து பேரும் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.