5 வயது சிறுவன்.. உடம்பெல்லாம் காயம்.. கொடூர கொலையால் பதட்டத்தில் ஆம்பூர்
5 வயது சிறுவன் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான்.
ஆம்பூர்: 5 வயசு பையனை கொடூரமாக அடித்து கொலை செய்து, அவனது உடலை கோயில் வளாகத்தில் வீசப்பட்ட சம்பவம்தான் ஆம்பூர் முழுவதும் பரபரப்பான பேச்சாக உள்ளது.
ஆம்பூர் அடுத்த மின்னூர் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில்தான் தமிழக அரசின் டால்கோ தொழிற்சாலை உள்ளது. நஷ்டம் காரணமாக இது எப்போதோ மூடப்பட்டுவிட்டது.

போர்வைக்குள் பிணம்
இந்த தொழிற்சாலைக்கு பக்கத்திலேயே ஒரு விநாயகர் கோயில் உள்ளது. அந்த கோயில் வளாகத்தில்தான் 5 வயது சிறுவன் கொலையுண்டு கிடப்பது தெரியவந்தது. அந்த வழியாக போனவர்கள் சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், அவனது உடலை ஒரு போர்வைக்குள் வீசப்பட்டுள்ளதையும் கண்டு அதிர்ந்து போயினர்.

உடம்பெல்லாம் காயம்
இதுபற்றி போலீசுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசாரும் விசாரணையை தொடங்கினர். ஆனால் சிறுவன் யார், ஏன் கொலை செய்யப்பட்டான் என்று அவர்களால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவன் அந்த ஊர் பையன் இல்லை என்று மட்டும் தெரியவந்துள்ளது. அவனுக்கு உடம்பெல்லாம் ரத்த காயங்கள் உள்ளன. நிறைய அவனை துன்புறுத்தி இருப்பார்கள் போல தெரிகிறது.

திணறும் போலீசார்
அது ஒரு தேசிய நெடுஞ்சாலை பகுதி. அதனால் வெளிமாநில வானகனங்கள் நிறைய வந்துபோகும் வாய்ப்பு உள்ளது. வெளியாட்கள்கூட சிறுவனை கொன்று இந்த பக்கம் போகும்போது வீசிவிட்டு சென்றிருக்கலாம். அதனால் கொலையாளியை கண்டுபிடிக்கவும், சிறுவன் யார் என்று கண்டுபிடிக்கவும் போலீசார் கொஞ்சம் திணறிதான் வருகிறார்கள்.

அதிர்ச்சியில் ஆம்பூர்
உடலை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். டோல்கேட் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களில் ஆய்வு, மோப்ப நாய் கொண்டும், தடவியல் நிபுணர்களை கொண்டும் என விசாரணையை தீவிரமாக கையிலெடுத்துள்ளனர். 5 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்ததுடன், அவன் உடலை கோயில் வளாகத்துக்குள் வீசி சென்ற அதிர்ச்சி சம்பவத்திலிருந்து ஆம்பூர் மக்கள் இன்னும் மீளவில்லை.












Click it and Unblock the Notifications