மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு.. நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. மாணவர்கள் குழப்பம்
மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் இடஒதுக்கீட்டில் பிரச்சனை நீடித்து வருகிறது.
சென்னை: மருத்துவ மேற்படிப்பு படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.
இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படியே அரசு மருத்துவர்களின் சேர்க்கை இருக்கும் என்று தீர்ப்பு கூறினார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது. அங்கு விசாரணைகள் நடைபெற்றன.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டு தீர்வு எட்டப்படும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், நீதிபதிகளின் இரு வேறுபட்ட கருத்துக்களால் 50 சதவீத இடஒதுக்கீட்டில் குழப்பம் நீடித்து வருகிறது.
50 சதவீத இடஒதுக்கீடு வழக்கை நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். அவர்களில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து நீதிபதி சசிதரன் தீர்ப்பளித்துள்ளார். மற்றொரு நீதிபதியான சுப்பிரமணியன் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாறுபட்ட தீர்ப்பால் இந்த வழக்கு 3வது நீதிபதியிடம் செல்லவிருக்கிறது. அதாவது தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுகிறது. அதன் பிறகுதான் 50 சதவீத இடஒதுக்கீட்டில் முடிவான முடிவு தெரியும்.












Click it and Unblock the Notifications