நீட்: கேரளாவில் மட்டும் 5371 தமிழக மாணவர்கள் தேர்வெழுத வேண்டும்.. தமிழகத்தில் இடமே இல்லையா?
Recommended Video
சென்னை: நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களில் நிறைய பேருக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5371 பேருக்கு எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும். சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் சிபிஎஸ்இக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் எவ்வளவு பேர் தேர்வெழுத செல்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவிற்கு மட்டும் தமிழகத்தில் இருந்து மாணவர்கள் 5371 பேர் தேர்வெழுத சென்று இருக்கிறார்கள். இவர்களுக்கு எர்ணாகுளத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் மதுரை மண்டலத்தில் இருந்து 1550 பேரும், திருச்சியில் இருந்து 1520 பேரும், நெல்லையில் இருந்து 3201 பேரும் தேர்வெழுத செல்கிறார்கள். தென்மாநிலங்களில் இருக்கும் 70 சதவிகித பேருக்கு, கேரளாவில்தான் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு வடஇந்தியாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.