சென்னையில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்... 5 நாட்கள் பக்தர்கள் தரிசிக்கலாம்
சென்னை: பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்பத்தில் தொடங்கியுள்ளது. ஒரே இடத்தில் அமைந்துள்ள 12 ஜோதிர்லிங்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சியை பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த ராஜயோக ஆசிரியை கலாவதி கொடியேற்றியும், குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார். வருகிற 11ம்தேதி வரை 5 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.
கண்காட்சியை இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டனர். பலர் அங்குள்ள தியான குடிலில் அமர்ந்து தியானம் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரம்மகுமாரிகள் அமைப்பின் ராயப்பேட்டை கிளை பொறுப்பாளர் ரஞ்சனி செய்துள்ளார்.
பிரம்மகுமாரிகள் அமைப்பு
ஜோதிர்லிங்க தரிசனம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மூத்த ராஜயோகி கலாவதி, பிரம்மகுமாரிகள் இயக்கம் அகில உலக அளவில் 147 நாடுகளில் 9,500 கிளைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் ஆன்மீகம், சமூகம் மற்றும் கல்விப்பணியை ஆற்றி வருகிறது.
அமைதியும் சேவையும்
இதன் தலைமையகம் ராஜஸ்தானில் உள்ளது. தமிழக மண்டல தலைமையகம் சென்னை அண்ணாநகரில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 300 கிளைகள் உள்ளன. பிரம்மகுமாரிகள் இயக்கம் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இது உலகம் முழுவதும் அமைதி சேவைக்காக பாடுபட்டு வருகிறது.
12 ஜோதிர்லிங்கம்
இந்த கண்காட்சியில் 12 ஜோதிர்லிங்கங்களை பக்தர்கள் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம். இதனை தரிசிப்பதன் மூலம் நேரில் அந்த தலத்துக்கு சென்ற அற்புத உணர்வு கிடைக்கும்.
5தத்துவங்கள்
இறைவன் மற்றும் ராஜ யோகம் பற்றிய விழிப்புணர்வு படக்காட்சிகள் கண்காட்சியில் அமைக்கப் பட்டு உள்ளது. இறைவனோடு மனம், புத்தியை இணைய வைக்கும் தியான பயிற்சி குடிலும் அமைந்துள்ளது. மனிதனின் 5 தத்துவங்கள், இறைவன் பற்றிய வீடியோ காட்சிகளும் இடம் பெற்று உள்ளது. 5 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியை கண்டு தரிசிக்கவேண்டும் என்றும் மூத்த ராஜயோகி கலாவதி. கண்காட்சி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு திறந்து இருக்கும். அனுமதி இலவசம்.