தி.நகரில் நகைக்கடை அதிபரின் காரில் இருந்து 5 கிலோ நகை திருட்டு

சென்னை தியாகராய நகர் துரைசாமி சாலையில் வசித்து வருபவர் மகாவீர் சந்த். இவரது மகன் மகேஷ்குமார் (38).
சவுகார்பேட்டையில் ‘நவரத்தினா ஜூவல்லர்ஸ்' என்ற பெயரில் நகை கடை நடத்தி வருகிறார். தினமும் காரில் கடைக்கு சென்று இரவு வீட்டிற்கு திரும்புவார்.
நேற்று இரவு கடையை அடைத்து விட்டு காரில் வீட்டிற்கு வந்தார். 5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை ஒரு பையில் வைத்து கொண்டு காரை மகேஷ் குமார் ஓட்டி வந்தார். அடுக்குமாடி குடியிருப்பு காம்பவுண்ட் கதவை திறந்து காரை உள்ளே கொண்டு செல்வதற்காக கேட் கதவை திறக்க கீழே இறங்கினார்.
கதவை திறந்து விட்டு மீண்டும் வந்த மகேஷ்குமார் காருக்குள் இருந்த நகை ‘பை' காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தார். கார் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.
அவர் நகையை எடுத்து வந்ததை யாரோ நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்துள்ளனர். காரை நிறுத்தி கீழே இறங்கிய சில மணித்துளி நேரத்தில் நகை பையை தூக்கி சென்று மாயமாகி விட்டனர்.
கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்திருக்கலாம் என தெரிகிறது. சவுகார் பேட்டையில் இருந்து வீடு வரை கண்காணித்து வந்து பின்னர் சரியான நேரம் பார்த்து பையை அபேஷ் செய்து விட்டனர்.
கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.1½ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் மகேஷ்குமார் புகார் கொடுத்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீசாரின் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் அவர் மீது சந்தேகமும் எழுந்துள்ளது. உண்மையிலேயே நகை கொள்ளை போனதா? அல்லது நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
இது குறித்து நகைக்கடை அதிபர் மகேஷ்குமார் கூறும் போது, இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம். நகையை பற்றி விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications