மதுரையில் சோகம்: தீபாவளி சீட்டு நடத்தி பணம் தர முடியாததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை!
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், தொழில் நஷ்டம் மற்றும் கடன் பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மதுரை: கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்றதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், இந்த தற்கொலைச் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே வண்டியூர் குறிஞ்சி நகரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், கடன் பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். 65 வயது ஜெகஜோதிக்கு வேல்முருகன் மற்றும் குறிஞ்சி குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஜெகஜோதி தனது இரண்டு மகன்கள், மருமகள், பேரக்குழந்தைகள் ஜெய தாரணி, ஜெய மோனிகா, ஜெயசக்தி, பேரன் பிரவீண் ஆகியோருடன் வசித்து வருகிறார். பிரவீண் மட்டும் விடுதியில் தங்கி பயின்று வருகிறார்.
குடும்பத்தோடு விஷம் குடித்தனர்
கடந்த சில நாட்களாகவே கடன் தொல்லையால் ஜெகஜோதி மன உளைச்சலோடு காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் இவர்களின் வீடு திறக்கப்படவில்லை. அருகில் வசிப்போர் பலமுறை கதவைத் தட்டியும் அவர்கள் திறக்கவேயில்லை. இதனால் பக்கத்து தெருவிலுள்ள அவர்களது உறவினர் ஒருவரை அழைத்து விசயத்தைக் கூறியுள்ளனர். அவர் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அனைவரும் விஷம் அருந்தி வீட்டிற்குள்ளேயே கிடந்துள்ளனர்.
6 பேர் மரணம்
இதில் ஜெயஜோதி, வேல்முருகன், குறிஞ்சிகுமரன், ஜெயசக்தி, ஜெயதாரணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு தேவி பாலா இறந்தார். தற்போது தங்கசெல்வி, ஜெயமோனிகா ஆகியோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
தீபாவளி சீட்டு மோசடி
108 ஆம்புலன்ஸ்சின் வருகை தாமதமான காரணத்தால் உயிருக்குப் போராடியவர்களை பைக் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஜெயம் நர்சரி என்ற பெயரில் இவர்கள் நடத்தி வந்த பள்ளிக்காக பல லட்சங்களைக் கடனாகப் பெற்று செலவு செய்துள்ளனர். இதற்கிடையே தீபாவளி பண்டு, சிறுசேமிப்பு, வட்டிக்கு பணம் தருதல் போன்ற பல்வேறு தொழில்களைச் செய்துவந்துள்ளனர்.
சொத்துகள் உள்ளன
இதில் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த மாதம் தீபாவளி வரும் நிலையில், பணம் செலுத்துவதற்கு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் கைப்பற்றிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களது குடும்பத்தாரின் பெயரில் பல கோடி மதிப்புள்ள கடைகள், பள்ளிக்கட்டிடம் என சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் நடவடிக்கை
பணம் கட்டிய நபர்கள் நூற்றுக்கணக்கானோர் வீட்டை முற்றுகையிட்டிருந்ததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்தது. பணம் கொடுத்த அனைவருக்கும் உரிய ஆவணம் இருப்பின் அதனை உடன் திருப்பித் தருவதற்கு ஆவன செய்வதாக போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் பயிலும் மாணவர் பிரவீணுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.