முத்துக்குமாரசாமி தற்கொலை... முதல் கட்டமாக 6 பேரை தூக்குகிறது சிபிசிஐடி!
சென்னை: நெல்லையில் மேலிடத்து பிரஷர் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி வழக்கில் 6 பேர் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.
கடந்த மாதம் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அதிமுக மற்றும் அமைச்சர் மட்டத்திலிருந்து கடுமையாக பிரஷகர் தரப்பட்டதால்தான் அவர் தற்கொலை முடிவை நாடியதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து வேளாண்துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கட்சிப் பதவிகளிலிருந்தும், அமைசசர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீஸார் வசம் விசாரணையில் உள்ளது. அவர்கள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். முத்துக்குமாரசாமியின் மனைவி மற்றும் குடும்பத்தினர், முத்துக்குமாரசாமியுடன் பணியாற்றிய அதிகாரிகள், நெருங்கிய நண்பர்கள் என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முழுவதையும் வீடியோவில் பதிவு செய்கின்றனர்.
நெல்லை வேளாண்துறையில் 7 டிரைவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு அதிமுக தரப்பில் ஒரு பதவிக்கு 3 லட்சம் வீதம் 7 பேரிடம் ரூ. 21 லட்சம் பணத்தை வசூலித்து விட்டனர். ஆனால் முத்துக்குமாரசாமி நேர்மையான முறையில் வேறு 7 பேரை தேரவு செய்து விட்டார். இதனால் கடு்ப்பான அதிமுக தரப்பு, ரூ. 21 லட்சம் பணத்தை முத்துக்குமாரசாமிதான் தர வேண்டும் என்று கூறி மிரட்ட ஆரம்பித்துள்ளனர். இந்த டார்ச்சர் தாங்க முடியாம்தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து விட்டார்.
தற்போது அதிமுகவினரிடம் பணம் கொடுத்த 7 பேரையும் சிபிசிஐடி போலீஸார் தங்கள் வசம் கொண்டு வந்து வைத்துள்ளனர். இவர்கள் யாரிடம் பணம் கொடுத்தார்கள் என்பது பட்டியல் இடப்பட்டுள்ளது. அதில் 6 பேர் சிக்கியுள்ளனர். முதல் கட்டமாக அவர்களைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் யார் என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications