சேகர் ரெட்டி, ராம மோகன ராவுடன் 6 அமைச்சர்கள் நெருக்கம்? விசாரணையில் அதிர்ச்சி தகவல்
வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டில் சிக்கிய தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மற்றும் சேகர் ரெட்டியுடன் தமிழக அமைச்சர்கள் 6 பேருக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபர்கள் சிலரும் ராம மோகன் ராவ் உடன் நெருக்கமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அண்மையில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் புதிய நோட்டுகள் மற்றும் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவரது நண்பரான தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ராம மோகன்ராவின் மகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் பணமும் 2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ராம மோகன் ராவ் மற்றும் சேகர் ரெட்டியிடம் தமிழக அமைச்சர்கள் 6 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி சில தொழில் அதிபர்களும் ராம மோகன் ராவுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு இடையே பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரி ஒருவரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரிசோதனையால் மற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதனிடையே சேகர் ரெட்டியுடன் தொடர்பில் இருந்த அனைவர் மீதும் சந்தேகம் உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனால் அடுத்தடுத்து சோதனைகள் தொடரும் என்று கூறிய அவர் ஆனால் எங்கு, எப்போது சோதனைகள் நடக்கும் என தெரியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications