வெள்ளத்தில் சிக்கித் தவித்த 62,000 பேர் மீட்பு: சென்னை மாநகராட்சி
சென்னை: வெள்ளத்தில் சிக்கித் தவித்த 62 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் 92 சிறப்பு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 62 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மண்ணிவாக்கம் அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற 3 பேருந்துகள் மற்றும் ஒரு அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து பேருந்துகளில் இருந்தவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.
குன்றத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் மனோகரன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் 2 ஜே.சி.பி. எந்திரங்கள், கயிறுகளுடன் அங்கு விரைந்து வந்தனர். உள்ளூர் வாலிபர்கள் சிலர் ஜே.சி.பி. எந்திரங்களுடன் சென்று கயிறு கட்டி பேருந்தில் இருந்த 50க்கும் மேற்பட்டவர்களை மீட்டனர்.
இதற்கிடையே கூடுவாஞ்சேரியில் தங்கி ஒரகடத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நெல்லையைச் சேர்ந்த கணேஷ் என்பவர் மண்ணிவாக்கம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் சாலையின் ஓரமாக இருந்த மெகா விளம்பர பலகையைப் பிடித்து அதன் மீது ஏறி அமர்ந்தார். சுமார் 8 மணிநேரம் கழித்து இரவு 2.30 மணிக்கு அவரை உள்ளூர் வாலிபர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications