நெல்லை குத்துச்சண்டை வீரரை கொல்ல வந்த 7 பேர் கைது; பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
நெல்லை: நெல்லையில் போலீசார் வாகன சோதனையில் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், குத்துச்சண்டை வீரரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியது அம்பலமானது.
நெல்லை பாலபாக்யா நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. குத்து சண்டை வீரர். இவரது வீட்டின் அருகே இருப்பவர் விக்னேஷ். புரோட்டா கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர் இசக்கி ராஜா வீட்டின் சுவர் மேல் ஏறி பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த இசக்கி ராஜா அவரை கண்டித்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இசக்கிராஜா போலீசில் புகார் செய்ததால் போலீசார் விக்னேஷை எச்சரித்து அனுப்பினர். இது குறித்து விக்னேஷ் தனது சகோதர் தினேஷிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் கூலிப்படையை ஏவி இசக்கிராஜாவை கொல்ல முடிவு செய்தார்.
இந்த நிலையில் சந்திப்பு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சப் இன்ஸ்பெக்டர் செபஸ்டியன் மற்றும் போலீசார் உடையார்பட்டி சோதனை சாவடியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தினேஷ் மற்றும் 6 பேர் காரில் வந்தனர். போலீசார் அவர்கள் வந்த காரில் சோதனை நடத்தினர். அதில் அரிவாள், கம்பு, பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
இந்த நிலையில் காரில் இருந்தவர்கள் திடீரென சப் இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றனர். சுதாரித்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் செங்கத்தான்பாறையை சேர்ந்த பஞ்சாண்டி, ஞானசேகர், செல்வம், ஜான்சன், கார்த்திக்ராஜா ராமசாமி என்பது தெரிய வந்தது. இதில் பேதுருமணி, ஞானசேகர், செல்வம் ஆகியோர் மீது முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது.
கூலிப்படையை சேர்ந்த இவர்கள் தினேஷ் ஏற்பாட்டில் இசக்கிராஜாவை தீர்தது கட்டுவதற்காக ஆயுதங்களுடன் வந்துள்ளனர். போலீசார் தகுந்த நேரத்தில் அவர்களை மடக்கி பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குத்து சண்டை வீரரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications