கடலூர்: மாணவிகளைக் கடத்திய வழக்கில் மேலும் 7 பேர் கைது
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த விவசாயி மகள், அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கூத்தப்பன்குடிக்காடு பகுதியை சேர்ந்தவரின் மகள் அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த மாதம் 16ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற இருவரும் மாலை வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளை தேடி வந்தனர். மாணவிகள் வைத்திருந்த செல்போனில் தொடர்பு கொண்டபோது திருப்பூரில் உள்ள பனியன் தொழிற்சாலையில் வேலையில் இருப்பதாகவும் கம்பெனியை விட்டு வெளியே அனுப்பாததால் கம்பெனி பெயர் தெரியவில்லை. திருப்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரிய கம்பெனி என போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து போலீசார் திருப்பூரில் முகாமிட்டு காணாமல் போன மாணவிகளை தேடியும் கிடைக்கவில்லை. இதனைதொடர்ந்து அவர்களது செல்போன் நம்பரின் சிக்னலை வைத்து பார்த்தபோது காணாமல் போன மாணவிகள் விருத்தாசலம், புதுச்சேரி கோலியனூர், வடலூர் ஆகிய பகுதிகளில் சுற்றுவது தெரியவந்தது. கடைசியாக வடலூரில் இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் அதிகமாக போனில் பேசியது வடலூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
உடனே சதீஷ்குமாரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவனது போன் மூலம் மாணவிகளிடம் பேச வைத்து அவர்களை திட்டக்குடி வரவழைத்து போலீசார் பிடித்தனர். கடலூர் ஏடிஎஸ்பி முரளி தலைமையில் டிஎஸ்பி கருணாநிதி, இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் அழகுராணி, கடலூர் அமுதா, சிதம்பரம் மீனா, பண்ருட்டி தீபா ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒரு கும்பல் பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் அவர்களை தள்ளியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இரண்டு மாணவிகளும் ஞாயிற்றுக்கிழமை தோறும் அங்குள்ள தேவாலயத்துக்கு சென்றுள்ளனர். அப்போது பாதிரியார் அருள்தாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதனையறிந்த திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி, மாணவிகளை மிரட்டி திட்டக்குடி பகுதியை சேர்ந்த சிலருக்கு விருந்தாக்கி உள்ளார். பின்னர் இரு மாணவிகளையும் விருத்தாசலத்தை சேர்ந்த கலா என்பவரிடம் ரூ.5 ஆயிரத்துக்கு லட்சுமி விற்றுள்ளார். 2 நாள் வைத்திருந்த கலா, அதே பகுதியை சேர்ந்த ஜெமினா என்பவரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.
தொடர்ந்து ஜெமினா, வடலூரில் தங்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த சதீஷ்குமாரிடம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். புதுச்சேரி வில்லியனூர், விழுப்புரம், வடலூர் பகுதியில் உள்ள லாட்ஜ்களில் மாணவிகளை தங்க வைத்து சிலருக்கு சதீஷ்குமார் விருந்தாக்கி உள்ளார்.
இதனைதொடர்ந்து மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார், பாதிரியார் அருள்தாஸ்(60), வடலூரில் தங்கியுள்ள அரியலூர் மாவட்டம் இடையன்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார்(28), திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த லட்சுமி என்கிற தனலட்சுமி(30), விருத்தாசலம் கலா(48), ஜெமினா(28) ஆகிய 5 பேரையும் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
பின்னர் திட்டக்குடி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதி மன்ற நீதிபதி உத்தமராஜ் வீட்டுக்கு 11 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். ஐந்து பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.
மாணவிகள் இருவரையும் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதி உத்தரவின்பேரில் இருவரையும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
மேலும், இந்த சங்கிலித் தொடர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்ற நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த இந்த தனிப்படை போலீசார் நேற்று 5 பெண்கள் உள்பட மேலும் 7 பேரைக் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications