விரட்டப்படும் டிடிவி தினகரன்.. ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்த 7 பேர் குழு- திடீர் திருப்பம்!
சென்னை: அதிமுகவை வழிநடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி நடுவே இணைப்பு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது. ஆனால் இரு அணிகள் இணைய உறுதியாக உள்ளன. இரு அணிகளுக்குமே மற்றொரு அணியின் தயவு தேவைப்படுகிறது.
இதனால் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து கீழே இறங்கி வர இரு தரப்பும் தயாராகியுள்ளது. இரு தரப்பும் இறங்கிவராவிட்டால் டிடிவி தினகரன் தரப்பு கரம் ஓங்கிவிடும் என்ற அச்சம் இரு அணிகளுக்கும் உள்ளது.
ஜெயக்குமார் பேட்டி
இந்த நிலையில், அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று முதல்வர் அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்தார். பேச்சுவார்த்தை மூலம், இணைப்பை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை
குழுக்கள் கலைக்கப்பட்டாலும் இணைப்பு பேச்சுவார்த்தை தொடருகிறது. ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தனர் என்றார் அவர். இதனால் அதிமுக தொண்டர்கள் குஷியாகியுள்ளனர்.
7 பேர் குழு
இதனிடையே, கட்சியை வழிநடத்த இரு அணிகளை சேர்ந்த எழுவர் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். குழுவின் தலைவராக ஓபிஎஸ் செயல்படுவார் என்றும்,
வழிநடத்தும் குழுவின் துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அமைச்சர் பதவி
ஓபிஎஸ் அணியின் 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால், எடப்பாடியே முதல்வராக தொடரலாமாம். அதிமுக தலைமை பதவிக்கு ஈடான பதவி இந்த குழு தலைவர் பதவி. எனவே டிடிவி தினகரன் டம்மி செய்யப்படுவதாக தெரிகிறது.