பஞ்சாயத்து டிவி ரூம் சாவிக்காக தகராறு - ஒருவர் பலியான சம்பவம்; 7 பேருக்கு 10 ஆண்டு சிறை!
தருமபுரி: தருமபுரியில் பஞ்சாயத்து அலுவலக அறை சாவி வைத்திருப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலியான சம்பவத்தில் 7 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகிலுள்ள வேப்பம்பட்டி கிராமத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் இரவு தேதி அங்குள்ள பஞ்சாயத்து தொலைக்காட்சிப் பெட்டி வைத்துள்ள அறையை பூட்டி, திறப்பது தொடர்பாக அப்பகுதியினரிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர்தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த அரூர் போலீஸார், அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன்கள் சண்முகம், அமரவேல், அன்பழகன், ஆசைத்தம்பி மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கராஜ், சேகர், சிதம்பரம் உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஆர்.லதா, குற்றவாளிகள் சண்முகம், அமரவேல், அன்பழகன், ஆசைத்தம்பி, தங்கராஜ், சேகர், சிதம்பரம் ஆகிய 7 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இவர்கள் தவிர குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சிறார் நீதிக்குழும நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்ற 4 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும், சண்முகம், அமரவேல், அன்பழகன், சேகர் ஆகியோருக்கு தலா ரூபாய் 3 ஆயிரமும், ஆசைத்தம்பி, தங்கராஜ் ஆகியோருக்கு தலா ரூபாய் 1000, சிதம்பரத்துக்கு ரூபாய் 2 ஆயிரமும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.