7 மூட்டை அரிசி மாயம்: ரேஷன் கடை ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்
நெல்லை: நெல்லை அருகே ரேஷன் கடையில் சோதனை நடத்தியபோது 7 மூட்டை அரிசி இருப்பு குறைந்ததால் கடை ஊழியர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை யூனியன் அடையகருங்குளத்தில் உள்ள ரேஷன் கடை சிவந்திரபுரம் தெ்டக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த கடையின் பணியாளராக செங்கோட்டையை சேர்ந்த பட்டுசாமி என்பவர் இருந்தார். இவர் அருகில் உள்ள சிவந்திபுரம் ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டார்.
அடையகருங்குளம் ரேஷன் கடைக்கு ஆறுமுகம்பட்டியில் வேலை பார்த்த சுடலைமுத்து என்பவர் நியமிக்கப்பட்டார். இக்கடையில் 350 கிலோ அரிசி அதாவது சுமார் 7 மூட்டைகள் இருப்பு குறைவாக இருப்பதாக கூறி சுடலைமுத்து கடையை திறக்காமல் இருந்துள்ளார்.

இது குறித்து பொதுமக்கள் சேரன்மகாதேவி சப் கலெக்டர் விஷ்ணுவுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் அம்பாசமுத்திரம் தாசில்தார் பால்துரை அடையகருங்குளம் ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். இதில் கடையில் 7 மூட்டை அரிசி இருப்பு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாசில்தார் பால்துரை சப் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து பட்டுசாமியை அழைத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணைக்கு பின் பட்டுசாமி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது ரேஷன் கடை ஊழியர்கள் வட்டாரத்தில் பீதியை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications