திண்டுக்கலில் 7 பள்ளிவாகனங்களின் உரிமம் ரத்து – ஆய்வாளர்கள் உத்தரவு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 202 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நடந்தது. இதில் 7 பஸ்களை இயக்க தடை விதிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களுக்கு அரசு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, பள்ளி வாகனம் முழுவதும் மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் முன்பும், பின் பகுதியிலும் ஊதா நிறத்தில் பள்ளி குழந்தைகளின் வரைபடத்துடன் கூடிய பள்ளி வாகனம் என்று ஒட்டப்பட்டிருக்க வேண்டும். வாகனத்தின் வலதுபுறத்தில் வாகன கட்டுப்பாட்டாளர் பெயர், முகவரி, போலீஸ் நிலைய டெலிபோன் எண் ஆகியவை இடம் பெற வேண்டும்.
இடதுபுறத்தில் பள்ளியின் பெயர், மற்றும் முகவரி எழுதப்பட்டிருக்க வேண்டும். 25 செ.மீட்டர் முதல் 30 செ.மீட்டர் உயரத்தில் படிக்கட்டு இருக்க வேண்டும். இருக்கைகள் உறுதியான முறையில் அமைத்தல், ஜன்னல்களின் ஓரத்தில் 5 செ.மீட்டர் இடைவெளியில் 3 கம்பிகள் இருக்க வேண்டும். அவசர காலத்தில் இறங்குவதற்கு வசதியாக வழி அமைக்கபட வேண்டும். தரைபகுதி முழுவதும் ஒரே தகடால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இதேபோல், பள்ளி வாகனங்களில் புத்தக பைகளை வைப்பதற்கு தனியாக அலமாரி, உறுதியான இருக்கை, 2 தீயணைப்பு கருவிகள், அனைத்து மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி ஆகியவை இருக்க வேண்டும். வாகனங்கள் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வேக கட்டுப்பாட்டுக்கருவி பொருத்த வேண்டும்.
5 வருட அனுபவம் பெற்ற வரை மட்டுமே டிரைவராக நியமிக்க வேண்டும். கண்டிப்பாக பள்ளிக் குழந்தைகளை ஏற்றி இறக்கு வதற்கு நடத்துனர் நியமிக்க வேண்டும். அவர் நடத்துனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற 23 வகையான பாதுகாப்பு விதிகளை பள்ளிகள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதுபோன்ற பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அமிர்திஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜய், தர்மானந்தம் முதன்மைக்கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ், துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ஆகியோர் மோட்டார் வாகனங்களை ஆய்வு செய்தனர்.
அப்போது 202 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் அவசர வழி சிறிய அளவில் அமைத்தது, படிக்கட்டு உயரமாக இருத்தல், தீயணைப்பு கருவிகள் இல்லாதது, கண்ணாடி உடைந்திருத்தல் ஆகியவற்றின் காரணமாக 7 பள்ளி வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டன.