நாட்டிலேயே முதல்முறை.. "மைக்ரோ அப்சர்வர்கள்" கண்காணிப்பு வளையத்தில் ஆர்.கே.நகர்!
தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக நுண் கண்காணிப்பு படையினர் 70 பேர் ஆர்.கே.நகரில் பயன்படுத்தப்படவுள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகரில் உள்ள பணப்பட்டுவாடாவை தடுக்க வீதி, வீதியாக, சந்து பொந்துகள் வழியாக கண்காணிக்க நுண் கண்காணிப்பு படையினர் 70 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், நாளுக்கு நாளுக்கு பணப்பட்டுவாடா பயங்கரமாக திருமங்கலத்தை விஞ்சும் அளவுக்கு நடந்து வருகிறது.
இதைத் தடுக்க தேர்தல் ஆணையமும் பல்வேறு வகையில் கண்காணித்து வந்தாலும், அவர்களது கண்ணில் மண்ணை தூவிவிட்டு பண வினியோகத்தில் கட்சியினர் ஈடுபடுகின்றனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி பேட்டி
இதனால் திணறி வரும் தேர்தல் ஆணையத்திடம் இடைதேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு சாராரும், முறைகேட்டை தடுக்க வேண்டும் என்று மறு சாராரும் கோரி வருகின்றனர். பணம் வினியோகத்தை தடுக்கும் விதமாக நடவடிக்கை குறித்து தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக
அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக நுண் கண்காணிப்பு பார்வையாளர்கள் 70 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள்பட்ட இடங்களில் உள்ள தெருக்கள், சந்து பொந்துகளில் இரு சக்கர வாகனங்களில் ரோந்து மேற்கொள்வர்.

நடவடிக்கை
அச்சமயம் பணப்பட்டுவாடாவில் ஈடுபடும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பவர். ஒரு இரு சக்கர வாகனத்தில் ஒரு பார்வையாளருடன் ஒரு போலீஸ்காரரும உடன் செல்வார். குறிப்பிட்ட பகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் குறித்து உண்மையான புகார்கள் வந்தால் அங்கு சென்று அதை தடுத்து நிறுத்துவதோடு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவர்.

சுழற்சி முறையில்
இந்த 70 பேரும் மூன்று ஷிப்ட்கள் அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மொத்தம் உள்ள 256 வாக்குச் சாவடிகளிலும் இவர்கள் தேர்தல் நடைபெறும் வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். இது தவிர 30 பறக்கும் படைகளும் கண்காணிப்பு பணி செய்து வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.14 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்துள்ளோம். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என்றார் கார்த்திகேயன்.












Click it and Unblock the Notifications