ஒன்னேகால் பவுன் நகைக்காக 70 வயது தாத்தா அடித்துக் கொலை
சேலம்: சேலத்தில் ஒன்னேகால் பவுன் நகைகளுக்காக 70 வயது முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மூக்கனூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(70). அவர் கடந்த 15 ஆண்டுகளாக சேந்தமங்கலத்தை அடுத்து உள்ள கொல்லிமலை பூங்குளம்பட்டியில் வசித்து வந்தார். அவர் மலைவாழ் மக்களிடம் நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் இருந்த ஈஸ்வரன் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்தனர்.
போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கொல்லிமலை கரையான்காட்டுப்பட்டியை சேர்ந்த விஜயகுமார்(24), தங்கராஜ்(38), பிரபாகரன்(24) ஆகியோர் திண்ணணூர் பொறுப்பு வி.ஏ.ஓ. மாதேஸ்வரன் முன்பு நேற்று காலை சரண் அடைந்தனர். அவர் அந்த 3 பேரையும் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் முதியவரை அடித்துக் கொன்றுவிட்டு அவர் வீட்டு பீரோவில் இருந்த முக்கால் மற்றும் அரை பவுன் மோதிரங்களை திருடிச் சென்றதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைக் ஒன்றை பறிமுதல் செய்தனர்.