ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 74.4% வாக்குகள் பதிவு.. சந்தீப் சக்சேனா தகவல்...
சென்னை : ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப் பதிவு அமைதியுடன் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி முடிவடைந்தது.
பதற்றமான வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
5 மணிக்குள் வாக்களிக்க வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அவர்கள் மட்டும் 5 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
காலையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற வாக்குப் பதிவு பிற்பகலில் சற்று மந்தமாகக் காணப்பட்டது.
5 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப்சக்சேனா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
பெண் வாக்காளர்கள் 74.8%, ஆண் வாக்காளர்கள் 74% பேர் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 30ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.