கையில் ஸ்மார்ட் போனைப் பிடித்துக் கொண்டே தூங்கும் 74% இந்தியர்கள்... அதிர்ச்சி ஆய்வு
சென்னை: இன்றைய இளசுகள் எல்லாம் ஆசைக்கு ஒரு ஆன்ட்ராய்டு... அவசரத்துக்கு ஒரு நோக்கியா என்றுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எப்போது பார்த்தாலும் ஸ்மார்ட் போனும் கையுமாக சுற்றுபவர்கள் படுக்கையில் கூட கையில் வைத்த நிலையிலேயே உறங்குவதாக சமீபத்திய சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாத்ரூம் போனாலும் கூடவே கொண்டு போகின்றனர். நிறைய பேரின் போன் டாய்லெட்டிற்குள் விழுந்தது வேறுகதை. நாங்க குளிக்காம கூட இருந்திருவோம், லீவு நாளில் மனசுக்கு பிடிச்சவங்களை பார்க்காம கூட இருப்போம் ஆனால் ஸ்மார்ட் ஃபோன் இல்லாம இருக்கமாட்டோம் என்று கூறியுள்ளனர் இந்தியர்கள்.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், சீனா, ஸ்பெயின், மெக்ஸிகோ ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரிடம் "கே.ஆர்.சி. ரிஸர்ச்' ஆய்வு நிறுவனம் அண்மையில் இணைய வழி ஆய்வு ஒன்றை நடத்தியது இதில் பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்துள்ளது.
படுக்கையில் துணை
7 நாடுகளையும் சேர்ந்த 7,112 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வில், ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்களில் 60 சதவீதம் பேர், படுக்கையில் ஸ்மார்ட் போனை கையில் வைத்துக் கொண்டே தூங்குவதாக ஒப்புக் கொண்டனர்.
74 சதவிகித இந்தியர்கள்
இந்தியர்களில் மட்டும் 74 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன் துணையுடன் தூங்குவதாகத் தெரிவித்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 70 சதவீத சீனர்கள் அவ்வாறு தூங்குவதாகக் கூறினர்.
தீ விபத்தின் போது
68 சதவீத இந்தியர்கள், தீவிபத்து நேரிட்டால் ஸ்மார்ட் போனைத்தான் முதலில் காப்பாற்றுவோம் எனத் தெரிவித்துள்ளனர். அப்போ மனைவி, குழந்தைகள் கதி என்னவாகும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கக்கூஸ் போனாலும்
ஆய்வில் பங்கேற்றவர்களில் 57 பேர், கழிப்பறைக்குச் செல்லும்போதும் தாங்கள் ஸ்மார்ட் போனை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர்.
அவ்வாறு கழிப்பறையிலும் ஸ்மார்ட் போனை விட்டுப் பிரிவதில்லை என 41 இந்தியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
குளிச்சாலும் விட மாட்டோம்
பாத்ரூம் போய் குளிக்கும்போது கூட ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தியதாக 22 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி, வார விடுமுறைகளில் முக்கியமானவர்களை சந்திக்காமல் கூட இருந்து விடுவோம் என்று15 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
குளிக்க மாட்டோம்
குளிக்காமல் இருந்து விடுவோம் என்று 18 சதவிகிதம் பேரும், உறங்காமல் இருப்போம் என்று 19 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஸ்மார்ட் போன் இல்லாமல் வெளியே போகமாட்டோம் என ஆய்வில் பங்கேற்றவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.