ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதகளம்.. 79.21% பெண்கள் அமோகமாக வாக்களிப்பு!
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் பெண்கள் 79.21% பேர் வாக்களித்துள்ளனர்.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் பெண்கள்தான் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். நேற்றை வாக்குப் பதிவில் 79.21% பெண்கள் வாக்களித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் இம்முறையும் நடைபெறுமா? என்பதில் கடைசி நிமிடம் வரை சந்தேகம் நீடித்து கொண்டிருந்தது. இருப்பினும் மீண்டும் தேர்தல் ரத்து ஆகாமல் நேற்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது.
வாக்குச் சாவடிகளில் காலை முதலே கூட்டம் அலை மோதியது. பகலில் விறுவிறுப்பாக இருந்த வாக்குப் பதிவு மாலை நேரத்தில் லேசாக தொய்வானது.
ஆனால் மாலை 5 மணிக்கு பின்னரும் 80-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் கூட்டம் நீண்ட வரிசைகளில் காத்திருந்தது. குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதியது என்றே சொல்லலாம்.
ஆர்.கே.நகரில் நேற்று மொத்தம் சராசரியாக 77% வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பெண்கள் மட்டும் 79.21% வாக்குகளைப் பதிவு செய்து அசத்தியுள்ளனர்.