சுவாதியை கொன்று விட்டு மோட்டார் பைக்கில் தப்பிய கொலையாளி- புதிய சிசிடிவி காட்சி சிக்கியது
சென்னை: சுவாதி கொலை வழக்கில் புதிய திருப்பமாக சிசிடிவி பதிவு சிக்கி உள்ளது. இதில் கொலையாளி இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. சுவாதி கொலை தொடர்பாக செங்கல்பட்டு அருகே உள்ள பரனுரில் 4 தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூளைமேடு முதல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வரை மூன்றாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. சுவாதி கொலையில் ஒரு வாரமாகியும் துப்பு துலங்கவில்லை. சுவாதி ஏன் கொலை செய்யப்பட்டார்? அவரை கொன்ற வாலிபர் யார்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
சுவாதி கொலை வழக்கில் போலீசாருக்கு துருப்பு சீட்டாக கிடைத்திருப்பது வீடியோ காட்சிகள் மட்டுமே. தற்போது கொலையாளி பற்றிய சில வீடியோக்கள் கிடைத்து வருகின்றன. கொலையாளி, கடந்த 24ஆம் தேதி காலை 6.32 மணியில் இருந்து 6.47 மணி வரை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்துள்ளான். சரியாக 6.32 மணிக்கு அவன் ரயில் நிலையத்தில் நுழைந்துள்ளான். அந்த காட்சி அருகில் உள்ள வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதன்பின், அவன் சுவாதியை கொலை செய்துவிட்டு, 2வது தண்டவாளத்தில் இருந்து குதித்து, தண்டவாளம் வழியாக ஓடி, முதல் நடைமேடையில் கொலையாளி ஏறி வேகமாக ஓடும் காட்சிகள் கிடைத்துள்ளது.
கத்தியுடன் ஓடும் கொலையாளி
கொலையாளி இடது கையில் கத்தியுடன் வேகமாக ஓடும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. அப்போது அவனுக்கு எதிர் திசையில் நடந்து வரும் வாலிபர் ஒருவர், அவனை அதிர்ச்சியுடம் மிரண்டு போய் பார்க்கிறார். அதன்பின் மூன்று முறை அந்த வாலிபர், கொலையாளியை திரும்பி பார்க்கும் காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் தப்பிய கொலையாளி
ரயில் நிலையத்தில் இருந்து சூளைமேடு வரை நடந்து சென்ற கொலையாளி அங்கிருந்து இருசக்கரவாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சி அடங்கிய புதிய சிசிடிவி கேமிரா பதிவை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் பதிவாகி உள்ள வாகன எண்ணை ஆய்வு செய்து, கொலையாளி குறித்து விசாரிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
மாயமான செல்போன்
கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான கொலைகளில் குற்றவாளிகளின் செல்போன் பேச்சை வைத்தே அவர்களை போலீஸார் கைது செய்து வரு கின்றனர். ஆனால் சுவாதி வழக்கில் அவரது செல்போன் மாயமாகிவிட்டது.
செல்போன் தகவல்
சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு அவரது செல்போன் சம்பவ இடத்தில் இல்லாததால், அவரது செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் சுவாதியின் நண்பர் ஒருவர் சுவாதி கொலை செய்யப்பட்ட பிறகு போன் செய்துள்ளார். அப்போது போனை எடுத்த நபர் பேசாமல் அழைப்பை துண்டித்துள்ளார்.
ஆந்திராவில் செல்போன்
அந்த செல்போன் ஆந்திராவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறை தனிப்படை ஒன்று குற்றவாளி ஆந்திரா மாநிலத்தில் இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஆந்திராவுக்கு விரைந்து சென்றுள்ளது.
குடும்பத்தினர் ஒத்துழைப்பு
சுவாதி கொலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. அவர்கள் மேலும் சில தகவல்களை கூறினால் குற்றவாளியை கண்டு பிடிக்க வசதியாக இருக்கும். சுவாதியின் நண்பர்கள் 2 பேர் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். அதை வைத்தே தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சுவாதி அலுவலகத்தில் விசாரணை
பரனூரில் சுவாதி பணிபுரிந்த அலுவலத்தில் 4 தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். சுவாதி அலுவலகத்தில் பிரத்யேகமாக ஒரு கம்ப்யூட்டரை பயன்படுத்தி வந்தார். வீட்டிலும் அவருக்கு ஒரு கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் உள்ளது. இவற்றில் பதிவாகி உள்ள தகவல்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் மூலமாகவும் போலீசாருக்கு சிறிது தகவல்கள் கிடைத்துள்ளது.
3 வது நாளாக வீடு வீடாக விசாரணை
சுவாதி வசித்து வந்த சூளைமேடு பகுதிகளில் வீடு வீடாக 3வது நாளாக இன்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூளைமேடு தொடங்கி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வரை உள்ள வீடுகள், கடைகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.
புதிய புதிய தகவல்கள்
தனிப்படை போலீசார் ஒட்டுமொத்த விசாரணைகளில் மாறுபட்ட பல தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் போலீசாரிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும் ஏதாவது ஒரு வழியில் கொலையாளி சிக்குவான் என்று போலீசார் நம்பிக்கையுடன் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.