வர்தா புயலால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேர் பலி - ஆட்சியர் தகவல்
காஞ்சிபுரம்: வர்தா புயலின் பாதிப்பால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
வர்தா புயல் திங்கட்கிழமை பிற்பகல் சென்னையில் கரையை கடந்தது. அப்போது 120 கி.மீ. வேகத்தில் சூரைக்காற்று வீசியது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான மரங்கள், விளம்பர பலகைகள், வீடுகள் இடிந்து நாசமானது. இதைத் தொடர்ந்து இந்த மூன்று மாவட்டங்களிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் கஜலட்சுமி கூறுகையில், வர்தா புயலால் மாவட்டம் முழுவதிலும் 8,330 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல் 130 மின்மாற்றிகள், 27 உயர் மின்அழுத்த கோபுரங்களும் சேதமடைந்துள்ளது.
சூறைக்காற்றால் 18,120 மரங்கள் சாய்ந்துள்ளதாகவும், 1,350 உட்புற சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் புயல் காற்று உள்ளிட்ட இன்னல்களில் சிக்கிய 8 பேர் பலியாகியுள்ளனர். மின்சாரம் இல்லாத இடங்களில் தேவையான அளவு மண்ணெண்னை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications