வரிசை கட்டும் வழக்குகள்: சசிகலா குடும்பத்தில் இதுவரை 8 பேருக்கு சிறை!
பல்வேறு வழக்குகளில் சசிகலா குடும்பத்தில் இதுவரை 8 பேருக்கு சிறைவாசம் கிடைத்துள்ளது.
Recommended Video

சென்னை: சொத்து குவிப்பு மற்றும் மோசடி வழக்குகளில் சசிகலா தொடங்கி அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு சிறைவாசம் கிடைத்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு, அன்னிய செலாவணி மோசடி வழக்கு, வெளிநாட்டு சொகுசு கார் இறக்குமதி வழக்கு, ஜெஜெ டிவி உபகரணங்களை முறைகேடாக இறக்குமதி செய்த வழக்கு, தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கு... இவ்வளவையும் எதிர்கொண்டு வருகிறது சசிகலா குடும்பம்.
1991-ல் ஜெயலலிதா முதல்வரானதுதான் தாமதம்.. ஒட்டுமொத்த சசிகலா குடும்பமும் நாலாபுறமும் களமிறங்கி எத்தனை முறைகேடுகளில் ஈடுபட முடியுமோ அத்தனையையும் செய்தது. இதனால்தான் 1997-ம் ஆண்டே இந்த வழக்குகள் அனைத்தும் போடப்பட்டன.

சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன்
ஆனாலும் சசிகலா குடும்பம் 'வாய்தாக்கள்' வாங்கியும் 'இழுத்தடித்தும்' 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகளை நகர்த்திவிட்டனர். இதில் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அனைவரும் விடுதலையாகினர். ஆனால் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் பெங்களூரு சிறையில் ஓராண்டுக்கும் மேலாக 3 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

சொகுசு கார் இறக்குமதி மோசடி
அடுத்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன் மற்று தினகரனின் தம்பி பாஸ்கரன் மீதான வெளிநாட்டு சொகுசு கார் இறக்குமதி வழக்கு. இந்த வழக்கில் நடராஜன், பாஸ்கரன் ஆகியோருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இன்னும் சிறைக்கு போகாமல் வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

திஹாரை பார்த்த தினகரன்
சசிகலாவின் அக்கா மகனாகிய தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி, ஹவாலா மோசடி, ஃபெரா மோசடி, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு என ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறைவாசத்தை அனுபவித்துவிட்டு வந்து ஆர்கே நகரில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார் தினகரன்.

சிறையில் தினகரன் தங்கை, மைத்துனர்
இவரது தம்பி பாஸ் என்ற பாஸ்கரன் மீது அதிமுகவினரிடம் ரூ7 கோடி மோசடி செய்த புகாரும் கூட நிலுவையில் உள்ளது. ஃபெரா வழக்கும் பாஸ்கரன் மீது நிலுவையில் உள்ளது. தற்போது தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, அவரது கணவர் பாஸ்கர் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 2 ஆண்டு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். இதுவரை சசிகலா குடும்பத்தில் 8 பேருக்கு சிறைவாசம் கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications